வரும் 25ஆம் தேதி இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கடலில் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்த தாழ்வுப்பகுதியானது, 27ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தமிழகத்தை நோக்கி நகர்ந்து 29ம் தேதி புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால்
29ஆம் தேதி முதல் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு. கடந்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் 10செ.மீ மழையும், தேனி மாவட்டம் பெரியகுளம், சேலம் மாவட்டம் தம்பம்பட்டி, சங்கரிதுர்கம் ஆகிய இடங்களில் 6செ.மீ மழையும், திருவண்ணாமலை, ஓசூர் 5 செ.மீ மழையும் பதிவானது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களான ஈரோடு,திருப்பூர், கோவை , நீலகிரி மற்றும் விருதுநகர்,மதுரை கன்னியாகுமரி, திருவாரூர் , தஞ்சாவூர், திருநெல்வேலியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசும் வெப்பநிலை நிலவும். வரும் 29ம் தேதி முதல் சென்னையில் மழைக்கு வாய்ப்பு.