சென்னை அயனாவரத்தில் உள்ள மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் ஜெயக்குமார். 52 வயதான இவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அவருக்கு குடலியல் துறை சிகிச்சைக்கு பரிந்துரைத்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து குடலியல் துறை மருத்துவர்கள் ஸ்கேன் உள்ளிட்ட சோதனைகளை மேற்கொண்ட போது அவரது வயிற்றில் சாவிகள், நாணயங்கள், சிம்கார்டுகள் உள்ளிட்ட பொருட்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இவற்றை வெளியில் எடுக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூடும் என்பதால் மருத்துவர்கள் எண்டோஸ்கோப்பி மூலம் சிறு துளையிட்டு அனைத்து பொருட்களையும் வெளியில் எடுக்க மருத்துவர்கள் முயற்சி மேற்கொண்டனர்.
அதன் படி எண்டோஸ்கோப்ப்பி சிகிச்சையில் டியூப் மற்றும் கிளிப்பை பயன்படுத்தி அனைத்து பொருட்களையும் மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். இந்தப் பொருட்களை வயிற்றில் இருந்து எடுக்கத் தவறியிருந்தால் வயிற்றில் ரத்தக் கசிவு மற்றும் செப்டிக் ஆகும்ப் வாய்ப்புகளும், உயிருக்கே ஆபத்தாகு வாய்ப்புகளும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறினர். இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால் லட்சக்கணக்கான ரூபாய் செலவாகியிருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.