ஆரோக்கியமாக இருக்க நாம் என்னென்ன செய்ய வேண்டும்?

ஆரோக்கியமான உடல் மற்றும் மனம் கிடைத்திட வாழ்வியல் ரகசியங்கள்…

ஆரோக்கியமாக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டாலே நாம் ஆரோக்கிய பயணத்தில் செல்லத் தயாராகி விட்டோம் என்று அர்த்தம். ‘ஆரோக்கியமே செல்வம்’ என்பார்கள். முழுக்க முழுக்க உண்மை. ஆரோக்கியமான உடல், மனம் இருந்துவிட்டால் பொருளாதார செலவுகளும் (how to lead a healthy lifestyle) குறைவுதான். மகிழ்ச்சியும் நிம்மதியும் நிரம்பிய வாழ்க்கை வாழ்ந்திட முடியும். இதோ இந்தப் பதிவோடு உங்களது ஆரோக்கிய பயணம் தொடரட்டும்.

ஆரோக்கிய ரகசியங்கள்… தினம் தினம் கடைபிடியுங்க…

காலை 5 – 7 மணிக்குள் மலம் கழித்துவிட வேண்டும். காலைக் கடனை கழிப்பதுதான் சரி. வந்தால் போவேன் எனச் சொல்பவர்கள் மலச்சிக்கலில் இருக்கிறார்கள். தூங்கி எழுந்ததும் காலையில் மலம் கழிக்கும் உடல்நிலையைக் கொண்டிருப்பவர்களே ஆரோக்கியமானவர்கள்.

2 – 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். அதற்கேற்றது போல ஒரு நாளைக்கு 4-6 முறையாவது சிறுநீர் கழிக்கிறீர்களா என செக் செய்து கொள்ளுங்கள்.

குளியல் என்றால் உடல் முழுவதும் நனைத்தல். உடலுக்கு குளியல், தலைக்குளியல் என நீங்களே பெயர் வைத்துக்கொள்ள வேண்டாம். நாள்தோறும் குளியல் (தலை மற்றும் உடல்) அவசியம். தலையில் எண்ணெய் போகவில்லையே இன்னும் கொஞ்சம் ஷாம்பு போடுவோம் எனச் செய்வது தவறு. எண்ணெய் தலைமுடியில் இருந்தாலும் பரவாயில்லை. நாள்தோறும் மிதமான ஷாம்பு போட்டு குளிக்கலாம். அல்லது ஷாம்பு இல்லாமலும் நாள்தோறும் தலை மற்றும் உடல் நனையும்படி குளிக்க வேண்டும்.

சைனஸ், ஒற்றைத் தலைவலி, சளி பிடிக்கும் என உடல் முழுக்க குளிக்காமல் விடாதீர்கள். தலை முடி நனைந்து குளிக்கப்படும் குளியலே இந்நோய்களுக்கு சரியானத் தீர்வு. குளித்த பின் நன்கு முடியை உலர்த்திக் கொள்ளுங்கள்.

வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் அவசியம்.

6 மாதத்துக்கு ஒருமுறை பேதிக்கு மருந்து சாப்பிட்டு வயிற்றை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

6 மாதத்துக்கு ஒரு முறை உள்ளாடைகளை மாற்றுங்கள். உள்ளாடைகள், மற்ற ஆடைகளை வெயிலில் காய வையுங்கள். முடிந்தவரை உள்ளாடைகளை ஐயன் செய்து போடுங்கள். இதனால் கிருமிகள் அழியும். வெயில் படும்படி உள்ளாடைகளை உள்பக்கமாக திருப்பி காய வைக்கலாம். கிருமிகள் நீங்கும்.

Image Source : solais true chettinad kitchen

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ், ஊறவைத்த வெந்தயம், தேங்காய்ப் பால் சேர்த்த கஞ்சி, பாதாம் பிசின், வெள்ளரி ஜூஸ் போன்ற குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

காபி, டீ குடிக்க கூடாது. வெறும் வயிற்றில் நிச்சயம் கூடாது. அசிடிக் சேர்ந்து விடும்.

எந்த உணவை சாப்பிட்டாலும் உதட்டை மூடி நன்றாக மென்று, சுவைத்து சாப்பிட வேண்டும்.

உளுந்து வடை போன்ற ஆரோக்கிய உணவை சாப்பிடலாம். ஆனால், அதிக அளவில் கூடாது.

சாக்லெட், பிஸ்கெட், பரோட்டா, பீட்சா, பர்கர், பிரெட், மைதா, பிராய்லர் சிக்கன், பாக்கெட் உணவுகள், குளிர் பானங்கள், துரித உணவுகளை அவசியம் தவிர்க்கவும்.

மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு சுக்குக் காபி அல்லது கிரீன் டீ அல்லது வெந்நீர் குடிக்கலாம்.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு அடுத்த திடஉணவை சாப்பிட கூடாது. இடைவெளி இல்லாமல் சிலர் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். அதுபோல செய்ய கூடாது.

ஆரோக்கிய நொறுக்கு தீனிகளான நிலக்கடலை, சுண்டல் வகைகள், கொழுக்கட்டை, பாயாசம், போலி, நட்ஸ், உலர்பழம், பழங்கள், கிரீன் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், கருப்பட்டி, வேக வைத்த கிழங்குகள், ஜூஸ், ஸ்மூத்தி, பழ சாலட், யோகர்ட் போன்ற ஆரோக்கியம் உள்ள உணவுகளை மட்டும் உண்ணுங்கள்.

வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, பேரீச்சை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிஃபிளவர், காளான், நீர் மோர், கீரைகள், கறிவேப்பிலை, தனியா, மிளகு ஆகியவற்றை சாப்பிட்டு மன அழுத்தத்தை விரட்டுங்கள்.

நம் ஊர் காய்கறிகள், பழங்கள், சீசன் உணவுகள், கீரைகள், கிழங்கு வகைகளை சாப்பிடுவது நல்லது.

சாதம் 100 கிராம், கீரை 50 கிராம், காய்கறிகள் 50 கிராம், சாம்பார், கூட்டு, வத்தக்குழம்பு, ரசம், மோர் போன்ற ஏதேனும் குழம்பு வகைகள் ஆகியவை மதிய உணவாக சாப்பிடலாம்.

தலை தித்திப்பு என்றால் இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவது அல்ல. இயற்கை உணவுகளில் உள்ள இனிப்பை முதலில் சுவைப்பது. சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு பழங்கள் சாப்பிடலாம்.

இதையும் படிக்க: 7 நாளைக்கு 7 வகையான காலை நேர ஈஸி, ஹெல்தி சமையல்… 1 வயது + கிட்ஸ் ரெசிபி…

வாரம் 4-5 முறையாவது சிறுதானிய உணவுகளை சாப்பிடுங்கள்.

களி உணவுகள், பிரவுன் அரிசி, உளுந்து துவையல், கருப்பு உளுந்து சாதம், கருப்பு எள் சாதம் இவற்றையும் செய்து சாப்பிடுங்கள்.

மீண்டும் மீண்டும் சூடுப்படுத்தி எந்த உணவுகளையும் சாப்பிடாதீர்கள்.

தண்ணீர், சீரகத் தண்ணீர், சோம்புத் தண்ணீர், சுக்கு தண்ணீர், வெந்தய தண்ணீர் ஆகியவைக் குடிக்கலாம்.

உணவில் மிளகு, சீரகம், மஞ்சள், தூள், பட்டை, கிராம்பு, சோம்பு, கடுகு, பூண்டு, இஞ்சி, அன்னாசி பூ, கடல் பாசி, ஏலக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சின்ன வெங்காயம், நாட்டு தக்காளி ஆகியவை இருக்கட்டும்.

இரவு 8 மணிக்கு செல்போன், டாப்லெட், டிவி ஆகியவை பார்ப்பதை நிறுத்திவிடுங்கள். இரவு 10,00 மணி முதல் தூங்க தொடங்குங்கள். காலை 5-6 மணிக்குள் விழித்துக்கொள்ள முயலுங்கள்.

ஒரு நாளைக்கு 30-40 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்ற ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளுங்கள்.

பெண்கள் தாங்கள் வைக்கும் சானிடரி நாப்கின்னை முடிந்தவரை பிளாஸ்டிக் இல்லாத காட்டன் நாப்கின் அல்லது துணியை வைத்துப் பழகுங்கள்.

மாலையில் திரிபலாவை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இரவில் கடுக்காய்த் தோல் கலந்து அரை டம்ளர் குடிக்கலாம். மலம் கழிக்க உதவும்.

நார்ச்சத்துகள் இல்லாத உணவுகளை சாப்பிடாதீர்கள்… நார்ச்சத்துகள் இல்லாத உணவு பீட்சா, பர்கர், துரித உணவுகள் ஆகியவை.

அசைவ உணவுகளை வாரம் 1-2 முறை மட்டும் சாப்பிடுங்கள். மீன்களை வாரம் 2-3 முறை சாப்பிடலாம்.

வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி, பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன் சாப்பிடலாம்.

தூள் உப்புக்குப் பதிலாக இந்துப்பு, கல்லுப்பு ஆகியவை சாப்பிடலாம்.

மாதத்தில் இருமுறை கரும்பு சாறு அருந்துங்கள். கல்லீரல் சுத்தமாகும்.

மலம், சிறுநீர், வாந்தி, தும்மல் ஆகிய இயற்கை கழிவுகளை அடக்க வேண்டாம்.

தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடுகெண்ணெய், நல்லெண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றைத் தொப்புளில் விடலாம். உடலுக்கு நல்லது.

இதையும் படிக்க: உணவில் சேர்க்கும் எண்ணெய் குழந்தைகளுக்கு நல்லதா? எப்போது எண்ணெய் சேர்க்கலாம்?

இரவு 8 மணிக்கு மேல் அதிகமான உணவுகளை உண்ணாதீர்.

அசைவ உணவுகளை 8 மணிக்கு மேல் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

இரவில் தக்காளி சார்ந்த உணவுகளைத் தவிர்க்கவும். நெஞ்செரிச்சல் தவிர்க்கலாம்.

Image Source : Veg kitchen

இதையும் படிக்க: உடனடி எனர்ஜி… பல்வேறு சத்துகள் உள்ள 3 வகை ஹோம்மேட் மால்ட் ரெசிபி…

அசைவ உணவுகளை சாப்பிட்டு மோர், தயிர், ஐஸ்கிரீம், யோகர்ட், பால், லஸ்ஸி, சீஸ், பனீர் உண்ண கூடாது. காபி, டீ தவிர். எலுமிச்சை அல்லது சாத்துகுடி, ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம்.

வாரம் 4-5 முறையாவது தியானம் செய்யுங்கள். தியானம் செய்ய தெரியாதவர்கள், மூச்சை கவனிக்கலாம்.

மெல்லிய இசைகளைக் கேட்கலாம். மியூசிக் தெரபி மனதை அமைதிப்படுத்தும்.

சளி, காய்ச்சல், தலை வலி, வயிறு வலி, மூட்டு வலி என சின்ன சின்ன விஷயத்துகெல்லாம் உடனே மருந்து, மாத்திரை, பெயின் கில்லர் சாப்பிட வேண்டாம்.

விளம்பரப்படுத்தும் உணவுகளை உண்ணாதீர்கள். வீட்டிலே நீங்களே செய்யும் ஹோம்மேட் சத்து மாவு, சத்து பானம், மற்ற ரெசிபிகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

நகம் வளர்ப்பது, நகம் கடிப்பது போன்ற கெட்ட பழக்கங்களைத் தவிர்க்கலாம்.

டென்ஷன், பதற்றம், அலைச்சல், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறையை வாழப்பழகுங்கள்.

அன்பு, பாசம், பொறுமை, கருணை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, அமைதி ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். தியானம், யோகா செய்ய செய்ய இதெல்லாம் கிடைக்கும்.

நேர்மறை சிந்தனைகள், பாசிடிவ் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்களது வாழ்க்கைய நல்ல எண்ணங்களால் சிறப்பாக்குங்கள்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு… நம் ஊர் பாரம்பர்ய வகை சாதம் ரெசிபி…

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…