தேவையானவை:
உளுத்தம்பருப்பு – அரை கப்,
உப்பு – ருசிக்கேற்ப,
எண்ணெய் – தேவையான அளவு,
மல்லித்தழை – சிறிதளவு.
ரசத்துக்கு: பருப்பு தண்ணீர் – 2 கப்,
புளித் தண்ணீர் – அரை கப்,
தக்காளி சாறு (வடிகட்டியது) – அரை கப்,
பழுத்த தக்காளி – 1,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு – ருசிக்கேற்ப,
பெருங்காயம் – அரை டீஸ்பூன்.
பொடிக்க: மிளகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிது.
தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:
உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, மெத்தென்று ஆட்டுங்கள். அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்து கெட்டியாக ஆட்டி, உப்பு சேர்த்து கலந்து எடுங்கள்.
பருப்பு தண்ணீருடன் புளி தண்ணீர், தக்காளி சாறு, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயம், பொடித்த பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நெய்யில் கடுகு தாளித்து, ரசக் கரைசலை ஊற்றுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி பொடியாக நறுக்கிய மல்லி சேருங்கள்.
எண்ணெயைக் காய வைத்து சிறு வடைகளாக தட்டி போட்டு, வெந்ததும் எடுத்து ரசத்தில் போட்டு சூடாக பரிமாறுங்கள். (பொடித்த பொடியை புளித் தண்ணீரில் சேர்க்காமல் பாத்திரத்தில் போட்டு, அதில் ரசத்தை இறக்கி ஊற்றினாலும் நன்றாக இருக்கும்).