அகத்திக் கீரையைப்போல பூவும் மருத்துவ குணம் நிறைந்தது. பூவை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கண் எரிச்சல், தலைசுற்றல், சிறுநீர் மஞ்சளாகப்போவது போன்ற பிரச்னைகள் சரியாகும். பீடி, சிகரெட் போன்ற புகைப்பழக்கம் உள்ளவர்கள் இந்தப் பூவை சமைத்துச் சாப்பிட்டு வந்தால், அவர்கள் உடம்பில் உள்ள விஷம் மலத்துடன் வெளியேறும்.
அதுமட்டுமல்ல புகைப்பிடிப்பதில் உள்ள ஆர்வமும் குறையும். அகத்திப்பூவுடன் மிளகு, சீரகம், ஓமம், பூண்டு, வெங்காயம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் இதய படபடப்பு, இதய வீக்கம், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்றவை கட்டுக்குள் வரும்.
அகத்திக்கீரையில் 63 வகை சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் 8.4 சதவிகிதம் புரதச்சத்து, 1.4 சதவிகிதம் கொழுப்புச்சத்து, 3.1 சதவிகிதம் தாதுஉப்புகள் மட்டுமல்லாமல் மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துகளும் உள்ளன.
அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால், உணவு எளிதில் ஜீரணமாகும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சியாகும். சிறுநீர், மலம் தாராளமாக வெளியேறும்.
மனக்கோளாறுகள் நீங்கும். அல்சர் என்னும் வயிற்றுப்புண் குணமாகும். சுத்தம் செய்யப்பட்ட கீரையுடன் சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டுவந்தால், வயிற்றுப்புண் சரியாகும்.
இந்தக் கீரையின் சாற்றை சேற்றுப்புண்களில் பூசி வந்தால், விரைவில் ஆறிவிடும். நாள்பட்ட புண்களின் மீது கீரையை மட்டும் அரைத்துத் தடவிவந்தால், விரைவில் ஆறும்.
தேமல் வந்த இடங்களில் இதன் இலையை தேங்காய் எண்ணெய்விட்டு வதக்கி, விழுதாக அரைத்துப் பூசி வந்தால் குணமாகும். இந்த கீரையின் சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்களின் மீது தடவினால் அவை காய்ந்து விழுந்துவிடும்.