தலைமுடி சார்ந்த வணிக பொருட்கள் அதிகரித்து வரும் நிலையில், சந்தையில் எது புதிதாக வந்தாலும் அதை வாங்கிப் பயன்படுத்தும் பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி சில விளம்பரங்களைப் பார்த்து ஹேர் ஜெல் போன்ற சிலவற்றை வாங்கி தலைமுடியில் தேய்க்கின்றனர்.
இது நல்லாயிருக்கே இதை ட்ரை பண்ணு என்று நண்பர்கள், முடி திருத்துபவர்கள் என சிலர் பரிந்துரைக்க, யோசிக்காமல் நாமும் அதையெல்லாம் தலைமுடியில் தேய்த்து வைக்க, அதன் பலனாக பல கெமிக்கல்கள் வேர் வரை ஊடுருவி முடியை சிறுகச் சிறுக கெடுதல் விளைவிக்கத் தொடங்கும். ஒரு கட்டத்தில் தலைமுடி முழுக்க கொட்டி, வழுக்கையாகிவிடும் என்பது உண்மை. எனவே ஜெல் பயன்படுத்துவதை தவிர்ப்பதே வரும் முன் காக்க என்பதன் அர்த்தம்.
நீங்கள் அடிக்கடி தொப்பி அணியும் பழக்கம் உள்ளவரா? அதுவும் நீண்ட நேரம் அணிவீர்களா? இது உங்கள் தலைமுடிக்கு கெடுதல் என்பது உங்களுக்குத் தெரியுமா? இயற்கையாக கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜன் உங்கள் தலைமுடிக்கு கிடைப்பதை நீங்களே தடா செய்து, விரைவில் வழுக்கையாகி அதன் பின் தொடர்ந்து தொப்பியை வேறு வழியின்றி அணியும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். எப்போதாவது ஆசைப்பட்டால் மட்டுமே தொப்பி அணிந்து மகிழுங்கள்.
டிவி விளம்பரங்களில் தினமும் ஷாம்பூ போட்டு தலைக்கு குளிக்கச் சொல்வார்கள். இது மிகவும் தவறு. தினமும் ஷாம்பூ தேய்த்து குளிக்க ஆரம்பித்தால் உங்கள் தலைமுடி வேர்கள் வலுவிழந்துவிடும். அதன் பிறகு தினமும் கணிசமான அளவு உதிர ஆரம்பிக்கும். தினமும் இப்படி முடி கொட்டினால் என்ன ஆவது?
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தலை வழுக்கையாகிவிடலாம். காரணம் ஷாம்பூவில் பலவிதமான வேதிப் பொருட்கள் உள்ளன. அவை உங்கள் தலைமுடியை சுத்தப்படுத்துவதுடன் குழி தோண்டி புதைத்துவிடும். ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை ஷாம்பூ போட்டு குளித்தால் போதுமானது.
தலைமுடியை வாரும் போதுதான் இந்தத் தவறு ஏற்படுகிறது. தலைவாருவது நல்ல பழக்கம்தானே என்று குழப்பமாக உள்ளதா? எப்போது தலை வாருவது என்பது எதனினும் முக்கியம். தலைக்கு குளித்துவிட்டு, அந்த ஈரத்துடன் சீப்பை போட்டு வறட் வறட்டென்று தலைமுடியை வாரினால் முடி உடைவதுடன், வேரோடு வெளியே வந்துவிடும். அடிக்கடி இப்படி செய்தால் வாராத வழுக்கையும் வந்து சேரும். தலைமுடி நன்றாக உலர்ந்த பின்னர் தான் சீப்பை பயன்படுத்தி தலைவார வேண்டும்.